வெற்றியைப் பறிக்குமா இந்திய இளம் அணி?.. இளம் அணி பற்றி ஓர் அலசல்! [You must be registered and logged in to see this image.]இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் "டுவென்டி-20' போட்டி இன்று டிரினிடாட்டில் நடக்கிறது. "சீனியர்' வீரர்கள் இல்லாத நிலையில், சுரேஷ் ரெய்னா தலைமையிலான இளம் இந்திய அணி முதல் வெற்றி பெற காத்திருக்கிறது.
வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய அணி ஒரு "டுவென்டி-20', ஐந்து ஒருநாள், மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகள் இடையிலான ஒரு "டுவென்டி-20' போட்டி, இன்று டிரினிடாட் குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நடக்கிறது.
ஓயாத கிரிக்கெட் காரணமாக தோனி, சச்சின், ஜாகிர் கானுக்கு ஓய்வு தரப்பட்டுள்ளது. காயம் காரணமாக துவக்க வீரர்கள் காம்பிர், சேவக் அணியில் சேர்க்கப்படவில்லை. யுவராஜ் சிங்கும் காய்ச்சலால் அணியில் இடம் பெறவில்லை.
புதிய துவக்கம்:வழக்கமான வீரர்கள் இல்லாத நிலையில், அணியின் துவக்கத்துக்கு பார்த்திவ் படேல், சிகர் தவான் தான் கைகொடுக்க வேண்டும். "மிடில் ஆர்டரில்' கேப்டன் ரெய்னா, ரோகித் சர்மா, பத்ரிநாத், மனோஜ் திவாரி ஆகியோர் உதவ காத்திருக்கின்றனர்.
சமீபத்தில் முடிந்த ஐ.பி.எல்., தொடரில் அசத்திய இவர்கள் இன்றும் சாதிக்கலாம். பின் வரிசையில் யூசுப் பதான் எழுச்சி காண்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சுழல் பலம்:பவுலிங்கை பொறுத்தவரை இந்திய அணிக்கு வேகப்பந்து வீச்சாளர்கள் பிரவீண் குமார், வினய் குமார், இஷாந்த் சர்மா மற்றும் கடந்த சில மாதங்களாக அசத்தி வரும் முனாப் படேல் போன்றோர் நம்பிக்கை தரலாம்.
அதேநேரம் சுழலில் சீனியர் ஹர்பஜன் சிங், அஷ்வின், அமித் மிஸ்ரா அடங்கிய மும்மூர்த்திகள் கூட்டணி, பெரும் பலமாக இருக்கும் என்று தெரிகிறது.
பேட்டிங் பலவீனம்:வெஸ்ட் இண்டீஸ் அணியின் பேட்டிங் சமீப காலமாக சுமாராகத்தான் இருந்து வருகிறது. அணியின் முன்னணி வீரர் டேரன் பிராவோ தொடர்ந்து சொதப்பி வருகிறார். துவக்க வீரர்கள் சிம்மன்ஸ், எட்வர்ஸ் இந்திய அணிக்கு எதிராகவும் ரன்குவிப்பில் ஈடுபடலாம். பின் வரிசையில் கேப்டன் சமி கைகொடுக்கலாம்.
ராம்பால் அசத்தல்:வேகப்பந்து வீச்சாளர் ராம்பால், தற்போதைய நிலையில் நல்ல பார்மில் உள்ளார். இவர் இந்திய வீரர்களின் "ஷார்ட் பிட்ச்' பந்து பலவீனத்தை பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கலாம். மற்ற வீரர்கள் ஆன்ட்ரூ ரசல், சாமுவேல்ஸ், சமியின் பவுலிங் இந்திய வீரர்களுக்கு தொல்லை தராது என்றே தெரிகிறது.
முன்னணி பவுலர்கள் கீமர் ரோச், ஜெரோம் டெய்லர், எட்வர்டர்ஸ் இல்லாதது பலவீனமே. சுழலில் தேவேந்திர பிஷூ மட்டும் தான் விக்கெட் வேட்டையில் ஈடுபட காத்திருக்கிறார். புதிய வீரர் ஆஷ்லே நர்ஸ் இன்று களமிறங்குவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
வெற்றி முக்கியம்:ரெய்னா தலைமையிலான இந்திய அணி தொடரின், முதல் போட்டியை வெற்றியுடன் துவக்க காத்திருக்கிறது. அதேநேரம் சொந்த மண் பலத்தில் உள்ள வெஸ்ட் இண்டீஸ் அணியும், வெற்றி பெற போராடும் என்பதால், விறுவிறுப்பான போட்டியை எதிர்பார்க்கலாம்.
வெ.இண்டீஸ் ஆதிக்கம்இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் சர்வதேச அளவில் இதுவரை, இரண்டு (2009, 2010 உலக கோப்பை) "டுவென்டி-20' போட்டிகளில் பங்கேற்றுள்ளன. இந்த இரண்டிலும் வெஸ்ட் இண்டீஸ் அணி தான் வெற்றி பெற்றுள்ளது.
கவனமாக இருப்போம்: ரெய்னாவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடர் குறித்து இந்திய அணி கேப்டன் ரெய்னா கூறியது:
இந்திய அணி தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்று வருகிறது. இதனால், சீனியர் வீரர்களுக்கு ஓய்வு எடுக்கும் தகுதி உள்ளது. என்னைப் பொறுத்தவரை கேப்டன் என்ற முறையில், இந்த தொடர் மிகவும் சவாலானது தான்.
அணியில் இடம் பெற்றுள்ள இளம் வீரர்கள், உலக கோப்பை, ஐ.பி.எல்., மற்றும் உள்ளூர் தொடரில் அசத்தியுள்ளனர். அடுத்த சில வாரங்களில் இவர்கள் எப்படி செயல்பட போகின்றனர் என்பது குறித்து அதிக எதிர்பார்ப்பில் உள்ளேன்.
வெஸ்ட் இண்டீஸ் அணி கடந்த சில மாதங்களாக சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். இதனால் அவர்களை எளிதாக எடுத்துக்கொள்ள மாட்டோம் என்றார்.
மழை வரும்இன்றைய போட்டி நடக்கும் டிரினிடாட் மைதான பகுதிகளில், கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால், வீரர்களின் பயிற்சி பாதிக்கப்பட்டது. இன்று வெப்பநிலை 32 டிகிரி செல்சியசாக இருந்தாலும், இடியுடன் கூடிய மழைவர 60 சதவீதம் வாய்ப்புள்ளது.