வெயில் காலத்தை கூட தாங்கிவிடலாம். ஆனால், மழைக்காலம்தான் யாரையும் பாடாய்படுத்தி விடும். மூக்கை சிந்துவது முதல் காய்ச்சல் வரை வலம் வரும். அதையும் தாண்டி, குளிர்காலத்தில் தான்,"வீக்'கான பலரும் உஷாராக இருக்க வேண்டும். அதிகாலையில் வாக்கிங் போவது முதல், உணவுக்கட்டுப்பாடு வரை, கவனத்தில் இருந்து சிதறி விடக் கூடாது; டாக்டர் சொல்படி கேட்டு நடந்துக் கொள்வதே நல்லது. இல்லாவிட்டால், நிலைமை மோசமாகி விடும்.
குளிர் காலத்தில் தான் பலருக்கும், உடலில் கோளாறுகள் ஏற்படும். குறிப்பாக, ஆஸ்துமாவுக்கு குளிர்காலம் தான் ரொம்பவும் பிடித்தமானது. சுவாசக் குழாய் சுருங்கி, மூச்சுவிட முடியாமல் ரொம்பவும் அவதிப்பட நேரும். சுவாசக் கோளாறுகளைவிட, இதய பாதிப்பு உள்ளவர்களுக்குத்தான் குளிர்காலம், பரம எதிரியானபருவம். இவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலக்கட்டம் இது. கோடை காலத்தைப் போல நினைத்து, நினைத்த நேரத்தில், வெளியில் சென்று வர முடியாது.
ஏன் ஆபத்து மிகுந்தது?
குளிர் காலத்தில், இதய ரத்தக் குழாய்கள் பாதிக்கப்படுகின்றன; சுரப்பிகள் வேலை செய்வது மாறுபடுவதால், இதய பாதிப்புக்குக் காரணமாகிறது. பகல் நேரத்தைவிட, இரவு நேரம் அதிகம். அதனால், வெப்பம் குறைவது இயல்பானது. வெப்பம் குறைந்தால், உடலில் சுரப்பிகள் வேலை செய்வது மாறுபடும்.
வெப்பம் குறைவாக இருக்கும் என்பதால், குளிர்காலத்தில், இதய நோயாளியின் ரத்தக்குழாய் சுருங்கியும், இறுக்கமாகவும் இருக்கும். இதனால், இதயத்துக்கு ரத்த ஓட்டம் பாதிக்கப்படும். உடலில் வெப்ப சக்தி தேவை. இந்த வெப்பத்தை தருவதற்கு,இதயம் வேலை செய்வது முக்கியம். இதய வால்வுகள் வேலை செய்தால் தான், அங்கிருந்து ரத்தம் மற்ற பாகங்களுக்கு அனுப்பப்படும். ரத்தத்தில்ஆக்சிஜன் இருப்பது அவசியம். குளிர்காலத்தில் இது குறைந்து விடும்.
அதிகாலை ரத்த அழுத்தம் ஆபத்தானது; குளிர் காலத்தில் காலையில் வாக்கிங் போவது, வெளியே போவது போன்றவற்றால், ஒரு பக்கம் ஆக்சிஜனும் குறைந்து, ரத்த அழுத்தமும்மாறுபடும்.
அதிகாலையில் எழுந்து வேலை செய்வது, இதய பாதிப்புள்ளவர்களுக்கு ரத்தத்தில் உள்ள கார்டிசால் அளவும் குறையும்.
அறுபது வயதைக் கடந்தவர்கள், பொதுவாகவே குளிர் காலத்தில் அதிகாலையில் எழுவது, வேலை செய்வது, வெளியில் வாக்கிங் போவது போன்றவற்றை, "மூட்டை' கட்டிவைக்க வேண்டும். சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் இருப்பவர்கள், குளிர் காலத்தில் குளிரில் எந்த வேலையையும் வைத்துக் கொள்ளக் கூடாது. அதிகாலையில் எழுந்து போகும் பழக்கத்தை குளிர்காலம் போகும் வரை மாற்றிக் கொள்ள வேண்டும்.
குளிர் காலத்தில் குளிரை தடுக்க முடியாது; ஆனால், இதய பாதிப்பை தவிர்க்க, சில நடைமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும். அப்படிச் செய்தால், இதய பாதிப்பில் இருந்து தப்பி விடலாம்.
நீங்கள் உடற்பயிற்சி செய்பவராக இருக்கலாம். குளிர் காலத்திலும் அதிகாலையில் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. வெயில் வந்தவுடன் செய்யலாம்.
காய்கறிகள், பழங்கள் அதிகம் உணவில் சேர்க்க வேண்டும். குளிர்பானங்களை விட, அதிக தண்ணீர் குடிக்க வேண்டும்.
குளிர் பருவம் வரை, டாக்டரின் ஆலோசனை மிகவும் முக்கியம். அப்போது தான் ரத்த அழுத்தம் நார்மலாக இருக்கும்.
அதனால், குளிர் காலத்தில் டாக்டரின் ஆலோசனைப்படி பரிசோதனை செய்து, மிகவும் உஷாராக இருப்பது அவசியம்.
நன்றி :தினமலர்