இருபது ஆண்டுகளுக்கு முன் நாசா அனுப்பிய செயற்கைக்கோள் ஒன்று செயலிழந்த நிலையில் அது இன்று பூமியைத் தாக்கலாம் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் 1991ம் ஆண்டு 3,525 கோடி ரூபாய் செலவில் யூ.ஏ.ஆர்.எஸ். என்ற உயர் வளிமண்டல ஆராய்ச்சி செயற்கைக் கோளை ஏவியது.
இது பூமியின் வளிமண்டலம் குறித்த தகவல்களை திரட்டித் தந்து கொண்டிருந்தது. 14 ஆண்டுகள் தகவல்களை அனுப்பிய யு.ஏ.ஆர்.எஸ். 2005ம் ஆண்டு செயலிழந்தது.
ஒரு பஸ் அளவான இந்த செயற்கைக் கோளின் எடை 5670 கிலோ விண்வெளியில் சுற்றி வந்த இந்த செயற்கைக்கோள் தற்போது பூமியின் வளிமண்டலத்தில் நுழையவுள்ளது. அப்போது அது 1,006 துண்டுகளாக வெடித்துச் சிதறும்.
இதில் பெரும்பகுதி வளி மண்டலத்தில் நுழையும் போது எரிந்து சாம்பலாகிவிடும். இருப்பினும் 26 துண்டுகள் பூமியைத் தாக்கும் அபாயம் உள்ளது. வெடித்து சிதறும் பாகங்கள் 150 கிலோ வரை எடை கொண்டவையாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது எப்போது விண்வெளியிலிருந்து கிளம்பும் என சரியாக ஆராச்சியாளர்களால் கணிக்க முடியவில்லை. எனினும் இன்று அல்லது நாளை பூமியில் விழும் என தெரிவிக்கின்றனர்.
செயல் இழந்த பல செயற்கைக்கோள்கள் விண்வெளியில் சுற்றி வருகின்றன. இவை பூமியில் விழுந்து பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. மீறி வளிமண்டலத்தில் நுழையும் செயற்கைக்கோள்கள் எரிந்து சாம்பலாகிவிடுகின்றன. அதையும் மீறி பூமிக்கு வரும் செயற்கைக்கோள்களை கடலுக்கு விழச் செய்வது வழக்கம்.
ஆனால் யு.ஏ.ஆர்.எஸ். செயற்கைக்கோளில் எரிபொருள் இல்லை. இதனால் இதன் செயல்பாட்டைக் கட்டுப்படுத்த முடியாது என தெரிவிக்கின்றனர். யு.ஏ.ஆர்.எஸ். செயற்கைக்கோளின் உடைந்த பாகங்கள் கடலில் விழ வாய்ப்புகள் அதிகம்.
இல்லையென்றால் வடக்கு கனடாவில் அல்லது தென் அமெரிக்காவின் தென்பகுதியிலும் விழ வாய்ப்புள்ளது. இதில் 3200ல் ஒரு பங்கு மனிதர்கள் மீது விழும் அபாயமும் இருக்கிறது. இது விழும்போது 750 கி.மீ. சுற்றளவு வரை இதன் பாகங்கள் பூமியில் பரவும்.