கால,நேரம் தேவையில்லை! அமேசன் ஆதிவாசிகளின் வியத்தகு வாழ்க்கை முறை விஞ்ஞான விந்தைகள் நிறைந்து காணப்படும் இன்றைய உலகில் நேரம் காலம் எதுவும் தெரியாமல், வருடம் மாதம் என்ற வார்த்தைகளே தெரியாமல், தங்களின் வயதை கூட எவரும் அறியாமல் ஒரு சமூகம் வாழ்ந்து வருகின்றது.
அமேஸன் பழங்குடிக் கோத்திரம் ஒன்று தான் இன்று இப்படி வாழ்ந்து வருகின்றது என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இவர்கள் பிறேஸிலின் அமொன்டவா கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களிடம் நேரம், வாரம், மாதம் அல்லது வருடம் என்ற வார்த்தைகளே பாவனையில் இல்லை.
உலகளாவிய ரீதியில் மனித குலத்துக்கு நேரம் என்பது மிகவும் அவசியமானதாகக் கருதப்படுகின்றது. ஆனால் அது தேவையே அற்றது என்பது நாகரிக உலகில் முதற்தடவையாக நிரூபிக்கப்பட்டுள்ளது என்று கூறுகின்றார் போஸ்ட்மவுத் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர் கிறிஸ் சின்ஹா.
நாங்கள் நேரத்தை மிகவும் முக்கியமானதாக எடுத்துக் கொள்கிறோம். எமது வாழ்வு முறையில் அது மிகவும் ஆழமாக ஊடுருவியுள்ள ஒரு விடயமாகிவிட்டது.
ஆனால் அவர்களுக்கு நேரம் என்ற ஒன்றே கிடையாது என்று இந்த அமொன்டவா கோத்திரத்தைக் கண்டுபிடித்துள்ள கிறிஸ் சின்ஹா குறிப்பிட்டுள்ளார்.
இவரும் இவரின் ஆய்வுக் குழுவைச் சேர்ந்த இன்னும் இரண்டு ஆய்வாளர்களும் இந்தக் கோத்திர மக்களோடு எட்டு வாரங்களைக் கழித்துள்ளனர். அடுத்தவாரம், கடந்த வருடம் போன்ற வார்த்தைகள் இவர்களின் எண்ணக்கருவில் கிடையாது.
இவர்களின் பரிபாஷையில் கூட அந்த அர்த்தத்தில் வார்த்தைகள் இல்லை. இவர்களுக்கு பகல் தெரியும், இரவு தெரியும், கோடை காலம், மழை காலம் என்பன தெரியும்.
இந்த சமூகத்தில் யாருக்கும் வயது என்ற ஒன்று கூட இல்லை. மாறாக வாழ்வில் அவர்கள் அடையும் கட்டங்களுக்கு ஏற்பவும், சமூகத்தில் அவர்களுக்குள்ள நிலைமைக்கு ஏற்பவும் பெயர்கள் மாறிக் கொண்டே செல்கின்றன.
உதாரணமாக ஒரு சிறு பிள்ளை, அந்தக் குடும்பத்தில் புதிதாக ஒரு குழந்தை பிறந்து விட்டால், தனது பெயரை புதிதாகப் பிறந்த குழந்தைக்குக் கொடுத்துவிட்டு வேறு ஒரு பெயரை வைத்துக் கொள்கின்றது. இப்படியே பெயர்கள் மாறிமாறிச் செல்கின்றன.
பிறேஸிலின் எல்லைப் பகுதியில் பொலிவியாக் குடியரசுக்கு அருகில் அமைந்துள்ள ரொன்டோனியா என்ற இடத்திலேயே இந்த அமொன்டவா கோத்திரம் வசிக்கின்றது.
1986ல் இவர்களின் இருப்புப் பற்றி உலகுக்கு முதற் தடவையாகத் தெரிய வந்தது. ஆனால் அவர்கள் அதன் பிறகும் தங்களது பழைய வாழ்வு முறையில் இருந்து விடுபடாமல் அப்படியே வாழ்ந்து வருகின்றனர்.
இவர்கள் நம்மைப் போல் காலத்தோடும் நேரத்தொடும் எதற்காகவும் போராடுவதில்லை. அந்த வகையில் அவர்கள் பூரண சிதந்திரத்துடன் வாழுகின்றனர் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
வேட்டையாடுதல், மீன் பிடித்தல், பயிர்ச்செய்கையில் ஈடுபடல் இவைதான் இவர்களின் வாழ்வின் பிரதான அம்சங்கள். இப்போது முதற் தடவையாக அவர்களின் வாழ்வில் ஒரு முன்னேற்றம் தென்பட ஆரம்பித்துள்ளது.
போர்த்துக்கேய மொழியை அவர்கள் கற்க ஆரம்பித்துள்ளனர்.