பிள்ளையாருக்கு எதிரே நின்று தோப்புக்கரணம் போடுகிறோமே,
அதை நமக்கு எல்லாம் சொல்லிக் கொடுத்தவர் மஹாவிஷ்ணுதான்
என்று ஒரு கதை இருக்கிறது. ஒரு சமயம் மஹாவிஷ்ணுவினுடைய
சக்கரத்தை அவரது மருமகனான பிள்ளையார் விளையாட்டாகப்
பிடுங்கிக் கொண்டு தம் வாயில் போட்டுக்கொண்டு விட்டாராம்.
பிள்ளையாரிடமிருந்து திரும்பப் பிடுங்குவது முடியாது. அவர்
மிகவும் பலம் உடையவர். அதட்டி மிரட்டி வாங்கவும் முடியாது.
ஆனால், அவரைச் சிரிக்க வைத்துச் சந்தோஷத்தில் அவர்
வாயிலிருந்து சக்கரம் கீழே விழுந்தால் எடுத்துக்கொண்டு விடலாம்
என்று மஹாவிஷ்ணுவுக்குத் தோன்றியதாம்.
உடனே நான்கு கைகளாலும் காதுகளைப் பிடித்துக் கொண்டு
ஆடினாராம். விநாயகர் விழுந்து விழுந்து சிரித்தார். சக்கரம் கீழே
விழுந்தது. விஷ்ணு எடுத்துக் கொண்டு விட்டார்.
“தோர்பி: கர்ணம்” என்பேத தோப்புக்கரணம் என்று மாறியது.
“தோர்பி” என்றால் “கைகளினால்” என்று அர்த்தம். ‘கர்ணம்’
என்றால் காது. “தோர்பி கர்ணம்” என்றால் கைகளால் காதைப்
பிடித்துக் கொள்வது.
விக்நேசுவரருடைய அநுக்கிரகம் இருந்தால்தான் லோகத்தில்
எந்தக் காரியமும் தடையின்றி நடக்கும். தடைகளை நீக்கிப் பூரண
அநுக்கிரகம் செய்கிற அழகான குழந்தைத் தெய்வம் பிள்ளையார்.
அவரைப் பிரார்த்தித்து, பூஜை செய்து, நாம் விக்கினங்கள் இன்றி
நல்வாழ்வு வாழ்வோமாக.