138 பயணிகளுடன் எஞ்சின் கோளாறு காரணமாக மொன்றியலில் தரையிறக்கப்பட்ட ஏயர்கனடா விமானம்! கனடாவின் ஹெலிபெக்ஸில் இருந்து 138 பயணிகளுடன் லண்டன் நோக்கிச் சென்று கொண்டிருந்த ஏர்கனடா விமானம், என்ஜின் கோளாறு காரணமாக மொன்றியல் நோக்கித் திசை திருப்பப்பட்டது.
நள்ளிரவு வேளையில் இந்தச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.
விமானம் புறப்பட்ட அரை மணிநேரத்தில் அதன் இடது பக்க என்ஜினில் பாரிய ஓசையுடன் கூடிய கோளாறு ஏற்பட்டது. உடனடியாக விமானிகள் விமானத்தை தொடர்ந்து செலுத்தாமல் அருகில் உள்ள ஒரு விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்க முடிவு செய்தனர்.
ஆனால் புறப்பட்ட இடமான ஹெலிபெக்ஸில் அப்போது கடும் இடி மின்னல் ஏற்பட்டிருந்ததால், அங்கு திரும்பிச் செல்ல முடியாமல் மொன்றியலுக்குத் திசை திருப்ப முடிவு செய்யப்பட்டது. விமானம் மொன்றியலில் பத்திரமாகத் தரையிறக்கப்பட்டது.
பயணிகள் இதனால் சற்று குழப்பமடைந்தனர். ஆனால் விமானிகளும், விமான ஊழியர்களும் இவ்வாறான நிலைமைகளைக் கையாள போதிய பயிற்சி உடையவர்கள்.
எனவே அவர்கள் மத்தியில் எந்தப் பிரச்சினையும் ஏற்படவில்லை என்று விமான சேவை அதிகாரி ஒருவர் கூறினார். விமானம் தற்போது முழு அளவிலான பரிசோதனைக்கு உட்படுத்தப் பட்டுள்ளது.
பயணிகள் ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் வேறு ஒரு விமானத்தில் பயணத்தைத் தொடரவும் ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.