பழையவை ஒழிந்தன
- பழையவை ஒழிந்தன
இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின. - (2 கொரிந்தியர் 5:17).
ஒரு பெரிய செல்வந்தர் புகழ்வாய்ந்த ஓவியர் ஒருவர் வர்ணம் தீட்டிய The Last Supper படத்தை அதிக விலை கொடுத்து வாங்கினார். அப்படத்தை தன்னுடைய வீட்டிலே மாட்டுவதற்கு முயற்சித்தபோது சரியான இடம் கிடைக்காமல், திண்டாடினார். உடனே ஒரு கட்டிட கலைஞனை அழைத்து ஆலோசனை கேட்டார். அவன் வந்து அந்த பணக்காரருடைய பங்களாவின் சுவர், அறைகள் அனைத்தையும் ஆராய்ந்து பார்த்தான். இறுதியாக அந்த கட்டிட கலைஞன் அந்த செல்வந்தரை பார்த்து ' ஐயா இந்தபடத்தை இந்த வீட்டில் மாட்டினால் பொருத்தமாயிருக்காது. அதற்கு ஏற்றபடி உங்கள் வீட்டை மாற்றியமைத்து கட்டுங்கள்' என்று கூறிவிட்டு போய்விட்டானாம். ஆம், அதுபோன்று இயேசு நம் உள்ளமாகிய வீட்டில் தங்க வேண்டுமானால் நமது வீட்டை சரி செய்தே ஆக வேண்டும்.
இன்று அநேகர் இவ்வாறு எண்ணுகின்றனர், 'இயேசு நல்லவர் என அறிந்திருக்கிறேன். அவரை என் கடவுளாக உள்ளத்தில் ஏறறுகொள்ள விரும்புகிறேன். ஆனால் என் பழைய வாழ்வு அப்படியே தான் இருக்கும், அதோடு இயேசுவையும் வைத்து கொள்கிறேன்' என்பதே அவர்கள் எண்ணம். உதாரணமாக ஒருவர் தன் வேலையில் இலஞ்சம் வாங்கி கொண்டேயிருக்கிறார். ஒரு நாள் தன் நண்பர் மூலம் இயேசுகிறிஸ்துவை பற்றி கேள்விப்படுகிறார். அவர்தான் உண்மை தெய்வம் என்பதை முழு நிச்சயமாய் ஏற்று கொள்கிறார். அன்றிலிருந்து வேறு தெய்வங்களை வழிபடுவதை அடியோடு விட்டுவிட்டார். ஆனால் வேலையில் தான் வாங்கி வந்த இலஞ்சத்தை விடவில்லை. அப்படியென்றால் அதில் என்ன பிரயோஜனம்? இயேசுகிறிஸ்துவை ஏற்று கொண்ட அவர் தன் வாழ்வில் எந்த மாற்றமும் செய்யவில்லை என்றால் அங்கு இயேசுகிறிஸ்து இருப்பது பொருத்தமாயிராது. அவர் நம் உள்ளத்தில் வாசம் செய்ய வேண்டுமானால், அவர் சொல்லும் சத்தியத்திற்கு ஏற்றபடி நம்மை மாற்றி கொள்ளத்தான் வேண்டும்.
இதை வாசிக்கும் நீங்கள் இயேசுகிறிஸ்துவே மெய்யான தேவன் என்று நம்புகிறீர்கள் என்பது முற்றிலும் உண்மையே. ஆனால் உங்கள் வாழ்வை அவர் விருப்பப்படி மாற்றியுள்ளீர்களா? அல்லது இன்னும் பொய்யராய், திருடராய், மூர்க்கராய், எரிச்சலுள்ளவராய், பணம், பெயர், புகழுக்கு முக்கியத்துவம் கொடுப்பவராய், சுய கௌரவத்தை விரும்புகிறவராய், சகோதரர்களை பகைக்கிறவராய், இலஞ்சம் வாங்குபவராய் இருக்கிறீர்களா?
பிரியமானவர்களே, உங்கள் பழைய வாழ்வோடு சேர்த்து இயேசுகிறிஸ்துவையும் இணைக்க முடியாது. சகேயு என்னும் ஆயக்காரன் இயேசுவை தன் உள்ளத்திலும், இல்லத்திலும் ஏற்று கொண்டவுடன், தான் இலஞ்சமாய் வாங்கிய அனைத்தையும் நாலத்தனையாய் கொடுத்தான். அவன் வீட்டில் ஆங்காங்கே வைத்திருந்த பண மூட்டைகளை ஏழை எளியோருக்கு கொடுத்தான். அவன் உள்ளத்தோடு சேர்ந்து வீடும் மாறியது. இயேசு மகிழ்வோடு அங்கு தங்கினார். நீங்களும் இன்றே உங்கள் பாவ சுபாவத்தை மாற்றுங்கள். பாவ வாழ்க்கையை விட்டு விலகுங்கள்.
அதுவும் வேண்டும், இதுவும் வேண்டும் என்று வாழ்வோமானால், ஆத்துல ஒருக்காலு, சேத்துல ஒரு காலு என்று அங்கும் இல்லாமல், இங்கும் இல்லாமல், அந்தரத்தில் சிலம்படிக்கிறவர்களை போல மாறிவிடுவோம். அதினால் யாருக்கும் எந்த பிரயோஜனமுமில்லை. சிலர் கர்த்தரிடத்தில் ஜெபித்தேன், அவர் கேட்டு எனக்கு பெரிய அற்புதத்தை செய்தார், ஆகவே அவரை என் சொந்த இரட்சகராக ஏற்று கொள்கிறேன் என்று சொல்வார்கள். ஆனால் பழைய வாழ்க்கையை விட்டு வெளியே வரவே மாட்டார்கள். அவர்கள் கிறிஸ்துவை ஏற்று கொண்டு என்ன பிரயோஜனம்? அவர் எனக்கு செய்தபடியால், நான் பெயருக்கு அவரை ஏற்று கொள்கிறேன் என்று தானே அர்த்தம்!
இவற்றை எல்லாம் விட்டுவிட்டு, கர்த்தரே தெய்வம் என்று வந்தவர்கள் தங்கள் பழைய வாழ்க்கையை விட்டுவிட்டு வரத்தான் வேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் கர்த்தரை ஏற்று பிரயோஜனமேயில்லை. கர்த்தரை பற்றி கொண்டு வாழும்போது, அவர் நமது வாழ்க்கையை இன்பமாய் மாற்றுவார். அண்டினோர் வாழ்வை இன்பமாக மாற்றும் தேவன் நம் தேவன். அவரை நம்பினோர் ஒருபோதும் வெட்கப்பட்டு போவதேயில்லை. ஆமென் அல்லேலூயா!
காட்டத்தி மரம் ஏறி ஒளிந்த
அந்த சகேயுவும் மாற்றம் பெற்றான்
உள்ளபடி யாவும் நாதரிடம் அறிக்கை செய்தான்
வெள்ளம் போன்றுள்ளம் பூரிப்படைந்தான்
..
எந்தன் உள்ளத்தில் புது உணர்வு
எந்தன் வாழ்வினில் புது மலர்ச்சி
எந்தன் நடை உடை பாவனை சொல் செயலும்
எந்தன் இயேசுவால் புதிதாயின