பாடியவர்: திருஞானசம்பந்தர் தலம்: திருவேதிக்குடி
நீறுவரி ஆடுஅரவொடு ஆமை மனவு என்புநிரை பூண்பர் இடபம்
ஏறுவர் யாவரும் இறைஞ்சு கழல் ஆதியர் இருந்த இடமாம்
தாறுவிரி பூகம்மலி வாழை விரை நாறஇணை வாளை மடுவில்
...வேறுபிரியாது விளையாட வளம் ஆறும் வயல் வேதிகுடியே.
சொற்பிரிவு இலாதமறை பாடி நடம் ஆடுவர் தொல் ஆனை உரிவை
மற்புரி புயத்து இனிது மேவுவர் எந்நாளும்வளர் வானவர் தொழத்
துற்புஅரிய நஞ்சு அமுதமாக முன்அயின்றவர் இயன்ற தொகுசீர்
வெற்புஅரையன் மங்கைஒரு பங்கர்நகர் என்பர்திரு வேதிகுடியே.
போழும்மதி பூண்அரவு கொன்றை மலர் துன்றுசடை வென்றி புகமேல்
வாழும்நதி தாழும் அருளாளர் இருள் ஆர்மிடறர் மாதர் இமையோர்
சூழும்இரவாளர் திருமார்பில் விரிநூலர் வரிதோலர் உடைமேல்
வேழஉரி போர்வையினர் மேவுபதி என்பர்திரு வேதிகுடியே.
காடர்கரி காலர்கனல் கையர் அனல் மெய்யர்உடல் செய்யர் செவியில்
தோடர் தெரி கீளர்சரி கோவணவர் ஆவணவர் தொல்லை நகர்தான்
பாடல் உடையார்கள் அடியார்கள் மலரோடு புனல் கொண்டு பணிவார்
வேடம் ஒளி ஆனபொடி பூசிஇசை மேவுதிரு வேதிகுடியே.
சொக்கர் துணை மிக்க எயில் உக்கு அறமுனிந்து தொழும் மூவர் மகிழத்
தக்க அருள் பக்கம் உற வைத்த அரனார் இனிது தங்கும் நகர்தான்
கொக்கு அரவம் உற்ற பொழில் வெற்றி நிழல் பற்றி வரி வண்டு இசை குலாம்
மிக்க அமரர் மெச்சி இனிது அச்சம் இடர் போக நல்கு வேதிகுடியே.
செய்யதிரு மேனிமிசை வெண்பொடி அணிந்து கருமான் உரிவை போர்த்து
ஐயம் இடும் என்று மடமங்கை யொடு அகம் திரியும் அண்ணல் இடமாம்
வையம் விலை மாறிடினும் ஏறுபுகழ் மிக்க இழிவு இலாதவகையார்
வெய்ய மொழி தண்புலவருக்கு உரை செயாத அவர் வேதிகுடியே.
உன்னி இரு போதும் அடி பேணும் அடியார் தம் இடர் ஒல்க அருளி
துன்னி ஒரு நால்வருடன் ஆல் நிழல் இருந்த துணை வன்தன் இடமாம்
கன்னிய ரொடு ஆடவர்கள் மாமணம் விரும்பி அரு மங்கலம் மிக
மின்இயலும் நுண்இடை நல் மங்கையர் இயற்று பதி வேதிகுடியே.
உரக்கரம் நெருப்பு எழ நெருக்கி வரை பற்றிய ஒருத்தன் முடிதோள்
அரக்கனை அடர்த்தவன் இசைக்கு இனிது நல்கி அருள் அங்கணன் இடம்
முருக்கு இதழ் மடக்கொடி மடந்தையரும் ஆடவரும் மொய்த்த கலவை
விரைக்குழல் மிகக்கமழ விண்இசை உலாவுதிரு வேதிகுடியே.
பூவின்மிசை அந்தணனொடு ஆழிபொலி அங்கையனும் நேட எரிஆய்
தேவும்இவர் அல்லர் இனி யாவர்என நின்று திகழ் கின்றவர்இடம்
பாவலர்கள் ஓசை இயல் கேள்விஅது அறாத கொடையாளர் பயில்வாம்
மேவுஅரிய செல்வம்நெடு மாடம்வளர் வீதி நிகழ் வேதிகுடியே.
வஞ்சஅமணர் தேரர் மதிகேடர் தம்மனத்து அறிவிலாதவர் மொழி
தஞ்சம்என என்றும் உணராத அடியார் கருது சைவன் இடமாம்
அஞ்சுபுலன் வென்று அறுவகைப் பொருள் தெரிந்துஎழு இசைக்கிளவியால்
வெஞ்சினம் ஒழித்தவர்கள் மேவி நிகழ்கின்ற திருவேதிகுடியே.
கந்தமல்லி தண்பொழில் நல்மாடம் மிடை காழி வளர் ஞானம் உணர்சம்
பந்தன்மலிசெந்தமிழின் மாலைகொடு வேதிகுடி ஆதி கழலே
சிந்தைசெய வல்லவர்கள் நல்லவர்கள் என்ன நிகழ்வு எய்தி இமையோர்
அந்த உலகு எய்தி அரசு ஆளும் அதுவே சரதம் ஆணை நமதே.